பொறுப்புகளை உணர்வோம்!

                                                    بسم الله الرحمن الرحيم 



 إِنَّمَا وَلِيُّكُمُ اللَّهُ وَرَسُولُهُ وَالَّذِينَ آمَنُوا الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَيُؤْتُونَ الزَّكَاةَ وَهُمْ رَاكِعُونَ

நிச்சயமாக உங்களுக்கு உற்ற நண்பர்கள்: அல்லாஹ்வும், அவனுடைய தூதரும்; எவர் ஈமான் கொண்டு, தொழுகையை கடைபிடித்து, ஜகாத்தும் கொடுத்து, (அல்லாஹ்வின் கட்டளைக்கு எந்நேரமும்) தலைசாய்த்தும் வருகிறார்களோ அவர்கள்தாம்.

இஸ்லாமிய மார்க்கம் மிக உன்னதமான மார்க்கம். எல்லா வித சிறப்புகளும் உயர்வுகளும் நிறைந்த மார்க்கம். ஏக இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கம். என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அல்லாஹ் மாக உயர்ந்தவன், அவனது ரஸூலும் மிக கண்ணியமானவர்கள், அவனது மார்க்கமும் மிக சிறப்பானது.

அது போல்  இந்த மார்க்கத்தை தனதாக்கி கொண்ட முஸ்லிம்களும் சிறந்தவர்கள்.

எனவே முஸ்லிம்களின் செயல்கள் இந்த மார்க்கத்தின் சிறப்பை தகர்த்து விட கூடாது.

அல்லாஹ் ரஸூலின் கண்ணியத்திற்கு இழுக்காக முஸ்லிம்களின் செயல்கள் இருக்க கூடாது.

சத்திய சஹாபாக்கள் இந்த மார்க்கத்தின் உயர்வுக்காக தன்னையே அற்பணம் செய்தார்கள்.

ஒரு மனிதன் இவ்வுலகில் எப்படி வாழ வேண்டும் என்பதை உலகம் அழியும் நாள் வரை வரக்கூடிய மக்களுக்கு வாழ்ந்து காட்டிருக்கிறார்கள் என்றால் அந்த புனிதர்கள் தன்னுடைய  பொறுப்புகளை சரியாக விளங்கி நடைமுறை படுத்தினார்கள்.

ஒரு ஹதீஸில் பெருமானார் நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்புதாரிகள் உங்களின்   பொறுப்புகளை பற்றி நாளை மறுமையில் விசாரிக்க படுவீர்கள் என்று சொன்னார்கள்.

இந்த மார்கத்தை பொறுத்தவரை கணவன், மனைவி, பெற்றோர்கள், பிள்ளைகள், ஆசிரியர்கள், மாணவர்கள், முதலாளிகள், தொழிலாளிகள், விற்பவர்கள், வாங்குபவர்கள், குடும்ப தலைவர், குடும்ப உறுப்பினர், முஹல்லாவின் தலைவர்,  முல்லாவாசிகள், ஆட்சி செய்பவன், அதிகாரி இப்படி எல்லோருமே  போருப்புதாரிகள். 

நம்முடைய பொறுப்பை நாம் எப்போது உணர்கிறோமோ அப்போதுதான் நம்முடைய செயல்களை சரியாக அமைத்து கொள்ளமுடியும். 

ஆனால் இன்று பொறுப்பிற்கும், பதவிக்கும் முஸ்லிம்கள் ஆசை படுகிறார்களே ஒழிய அந்த பொறுப்பை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துவதில்லை.

அது வீட்டின் பொறுப்பாக இருந்தாலும் சரி, நாட்டின் பொறுப்பாக இருந்தாலும் சரி, முஹல்லாவின் பொறுப்பாக இருந்தாலும் சரி  கவனமின்மை தான் அதிகம் இருக்கிறது.


ஏனென்றால் நாம் பதவியை பெரும் பரிசாக நினைக்கிறோம்.

நாயகம் அப்துர் ரஹ்மான் இப்னு சமூரா (ரலி) அவர்களிடம்  அப்துர் ரஹ்மானே நீங்கள் ஒருபோதும் பதவியை கேட்டு பெறாதீர்கள். அப்படி நீங்கள் கேட்டு பெற்றால்  அதில் அல்லாஹ்வின் உதவி இல்லாமல் அது உங்களுக்கு சுமையாக ஆகிவிடும். ஆனால் நீங்கள் விரும்பாமல் ஒரு பதவி கிடைத்தால் ஏற்று கொள்ளுங்கள் அப்போது அல்லாஹ்வின் உதவி அதில் இருக்கும் என்று சொன்னார்கள்.

ஹழ்ரத் அபூதர் (ரலி) அவர்கள் பெருமானாரிடத்தில் வந்து நாயகமே என்னை ஏதாவது ஒரு நாட்டிற்கு கவர்னராக ஆக்கமாட்டீர்களா?என்று கேட்க. அபுதரே  நீங்கள் மிக பலகீனமானவர் பொறுப்பு என்பது ஒரு பெரும் அமானிதம், அந்த பொறுப்பு மறுமை நாளிள் பெரும் கேவலத்தையும்     கைசேதத்தையும் ஏற்படுத்தும்  என்று நாயகம் பொறுப்பை கேட்டு வந்தவர்களிடம் உபதேசம் செய்தார்கள்.

ஹழ்ரத் அபூமூஸா அஷ்அரி (ரலி) அவர்கள் நானும் எனது சிறிய தந்தையின் மகன்களும் நாயகத்திடம் சென்று யாரஸூலுல்லாஹ் அல்லாஹ் தங்களின் ஆளுமையின் கீழ் எந்தெந்த பகுதியை ஆக்கி இருக்கிறானோ அதில் சில பகுதிகளின் ஆளுநர்களாக எங்களை ஆக்குங்கள் என்று கேட்க உடனே நாயகம் அல்லாஹ்வின் மீது சத்தியமாக யார் பதிவுகளை கேட்கிறார்களோ அவர்களை அந்த பதவிகளில் அமர்த்த மாட்டேன் என்று கோபத்தோடு சொன்னார்கள்.

இந்த செய்திகளிலிருந்து நமக்கு விளங்குவது பதவி மோகம் நம்மை அழித்து விடும், நமக்கு அகம்பாவத்தை ஏற்படுத்தும்,சர்வ சாதரனமாக பாவங்களை செய்ய வைத்து விடும் குடும்பங்களுக்கு மத்தியிலே பிரிவினையை ஏற்படுத்தும்,நமது உறவினர்களை விரோதிகளாக மாற்றிவிடும்.

நாயகத்தின் மரணத்திற்கு பிறகு கிலாஃபத் பொறுப்பை ஏற்க எந்த சஹாபியும் முன் வரவில்லை ஹழ்ரத் அபூபக்ர் (ரலி) அவர்கள் ஹழ்ரத் உமர் (ரலி) அவர்களையும் ஹழ்ரத் உமர் (ரலி) அவர்கள் ஹழ்ரத் அபூபக்ர் (ரலி) அவர்களையும் இந்த இருவரும் சேர்ந்து ஹழ்ரத் அபு உபைதா  (ரலி) அவர்களை சிபாரிசு செய்ய இறுதியில் வேறு வலி இல்லாமல்  நிர்பந்தமாகத்தான் ஹழ்ரத் அபூபக்ர் (ரலி) அவர்கள் ஏற்று கொண்டார்கள்.

ஹழ்ரத் உமர் (ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில் ஹழ்ரத் அபூ ஹுரைரா (ரலி) அவர்களை அழைத்து உங்களை ஒரு நாட்டின் கவர்னராக ஆக்க போகிறேன் என்று சொன்ன போது ஒரு போதும் அப்படி செய்யாதீர்கள் எனக்கு எந்த தகுதியும் இல்லை என்றார்கள்.  ஹழ்ரத் உமர் (ரலி) அவர்கள் ஏன் அபூ ஹுரைரா வேண்டாம் என்கிறீர் உம்மை விட சிறந்த மனிதரான நபி யூசுஃப் (அலை)அவர்கள் அல்லாஹ் கொடுத்த பதவியை ஏற்று கொள்ள வில்லையா என்று கேட்க?ஹழ்ரத் அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் யாரை யாரோடு ஒப்பீடு செய்கிறீர் ஹழ்ரத்  யூசுஃப் (அலை) அவர்களும் நபி,அவர்களின் தந்தையும் நபி ஆனால் நானோ ஒரு  அடிமையின் மகன் தானே எனவே எனக்கு பதவியை தராதீர்கள் என்று சொன்னார்கள்.

இமாமுல் அஃலம் அபு ஹனிஃபா (ரஹ்) அவர்களிடம் அன்றைய ஆட்சியாளர் இமாம் அவர்களை நிதி அமைச்சராக பொறுப்பேற்கும் படி கேட்டுகொண்டார் ஆனால் இமாம் அவர்கள் மறுத்து விட்டார்கள் தன் கட்டளையை மருத்தாள் கசையடி விழும் என்று அரசர் சொல்ல கசையடி விளுந்தாளும் சரி நான் இந்த பொறுப்பை ஏற்று கொள்ள மாட்டேன் என்று சொல்லி கசையடியையும் பெற்று கொண்டார்கள்.(இமாம்களின் வரலாறு)

இன்னொரு முறை இராக்கின் அரசர் மன்சூர் அவர்கள்  இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் மிக உயர்ந்த பதவியான உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பொறுப்பை  தாங்கள் ஏற்க வேண்டும் என்று இமாம் அவர்களிடம்  கேட்டு கொண்ட போது இமாம் அவர்கள் எனக்கு அந்த தகுதி இல்லை என்று கூறினார்கள். உடனே அரசர் கோபமாக நீங்கள் பொய் சொல்கிறீர்கள் உங்களுக்கு அந்த தகுதி நிச்சயம் உண்டு என்றார். நிச்சயமாக எனக்கு அந்த தகுதி இல்லை ஏனென்றால் நான் பொய் சொல்வதாக தாங்களே சொல்கிறீர்களே  ஒரு பொய்யர் எப்படி நீதிபதியாக ஆகமுடியும் என்று இமாம் அவர்கள் சொல்ல. இந்த பதிலை கேட்ட அரசர் தமது பேச்சையே தமக்கு எதிராக திருப்பி தப்பித்து கொள்கிறாரே என்று வியந்து  போனார். அரசரும் இமாம் அவர்களை விடுவதாக இல்லை மீண்டும் வார்த்தைகள் தொடர வாதம் நீண்டு கொண்டே போனது இறுதியில் அரசர் கொடுத்த பொறுப்பை ஏற்க மறுத்த தற்காக அரசர் இமாம் அவர்களை சிறையில் அடைத்தார் அதையும் தயங்காமல் ஏற்றுக்கொண்டு தனது வாழ்கையின் இறுதி காலத்தை சிறையிலேயே கழித்து மரணமும் அடைந்தார்கள்.
                                              (இமாம்களின் வரலாறு)

நமது முன்னோர்கள் உயிரை விட்டாலும் பதவி மோகம் வந்துவிட கூடாது என்பதில் மிக கவனமாக செயல்பட்டார்கள்.

அதேநேரத்தில் நாம் விரும்பாமல் நமக்கு பதவி கிடைத்தால் அதிலே அல்லாஹ்வின் உதவி கண்டிப்பாக இருக்கும். 

குர்ஆன் கூறும் பொறுப்பு தாரிகள்!

 إِنَّمَا وَلِيُّكُمُ اللَّهُ وَرَسُولُهُ وَالَّذِينَ آمَنُوا الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَيُؤْتُونَ الزَّكَاةَ وَهُمْ رَاكِعُونَ

நிச்சயமாக உங்களுக்கு உற்ற நண்பர்கள்: அல்லாஹ்வும், அவனுடைய தூதரும்; எவர் ஈமான் கொண்டு, தொழுகையை கடைபிடித்து, ஜகாத்தும் கொடுத்து, (அல்லாஹ்வின் கட்டளைக்கு எந்நேரமும்) தலைசாய்த்தும் வருகிறார்களோ அவர்கள்தாம்.(5:55)

 إِنَّمَا يَعْمُرُ مَسَاجِدَ اللَّهِ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَأَقَامَ الصَّلَاةَ وَآتَى الزَّكَاةَ وَلَمْ يَخْشَ إِلَّا اللَّهَ ۖ فَعَسَىٰ أُولَٰئِكَ أَن يَكُونُوا مِنَ الْمُهْتَدِينَ
அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்யக்கூடியவர்கள், அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் ஈமான் கொண்டு தொழுகையைக் கடைப்பிடித்து ஜகாத்தை (முறையாகக்) கொடுத்து அல்லாஹ்வைத் தவிர வேறெதற்கும் அஞ்சாதவர்கள்தாம் - இத்தகையவர்கள்தாம் நிச்சயமாக நேர் வழி பெற்றவர்களில் ஆவார்கள்.(9:18)


அல்லாஹ்வின் மீது முழுமையான அச்சம் தேவை !

இமாம் சுயூத்தி(ரஹ்) கிதாபில் பதிவான செய்தி பாத்திமா பிந்து அப்துல் மாலிக் சொல்கிறார்கள்  என் கணவர் உமர் இப்னு அப்துல்  அஸீஸ்(ரஹ்) அவர்கள் கலீஃபா வாக ஆனதிலிருந்து இரண்டரை வருடம் ஒரு முறை கூட தூக்கத்தில் அவர்களுக்கு குளிப்பு கடமையானதே இல்லை அந்தளவிற்கு அல்லாஹ்வை பயப்படுவார்கள் நாளை மறுமையில் இந்த பொறுப்பை பற்றி கேட்டால் நான் என்ன பதில் சொல்வேன் என்றே சொல்லி கொண்டிருபார்கள். 

பொது சொத்தில் கவனம் தேவை!

ஹழ்ரத் உமர் இப்னு அப்துல் அஸீஸ்(ரஹ்) அவர்கள் ஒரு முறை கடும் குளிரான நேரத்தில் தன்னுடைய பணிவிடையாலரிடம் தண்ணீரை சூடாக்க சொன்னார்கள் அவர் பைதுல் மாளினுடைய நெருப்பு எரிந்து கொண்டிருக்க அதிலே சூடாக்கி எடுத்து வந்தார் இதை தெரிந்து கொண்ட ஹழ்ரத் உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்)அவர்கள்  பைதுல் மாளின் நெருப்பை பயன் படுத்தியதற்காக அவர்களின் பணத்திலிருந்து ஒரு திர்ஹத்திற்கு விறகை வாங்கி போட்டு விட  சொன்னார்கள். 

இன்னுமொரு சந்தர்பத்தில் மக்களோடு ஊர் விவகாரத்தை பற்றி  பேசிக்கொண்டிருந்தார்கள். சபை களைந்த பிறகு எரிந்து கொண்டிருந்த விளக்கை அனைத்து விட்டு வேறு ஒரு விளக்கை பற்ற வைத்தார்கள். சிலர் ஏன் அதை அனைத்து விட்டு இதை பற்றவைத்தீர்கள் என்று கேட்க அது பைத்துல் மாளுடைய பணத்தில் வாங்கியது இது என்னுடையது அது பொது காரியத்திற்கு மட்டும்தான் பயன் படுத்த வேண்டும்  என் சொந்த விஷயத்திற்கு பயன் படுத்த கூடாது என்றார்கள். 


அடுத்து பொறுப்பில் உள்ளவர்கள் தானாக முன் வந்து வேலைகளை செய்ய வேண்டும்!

நமது பகுதி மக்களுக்கு ரகசியமாக உதவ வேண்டும்.

ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். பத்ரு யுத்தத்திற்கு செல்லும் போது மூன்று நபர்களுக்கு ஒரு வாகனம் என்று சஹாபாக்களை நாயகம் பிரித்து விட்டார்கள் அப்படி ஹழ்ரத் அபு லுபாபா, ஹழ்ரத் அலி (ரலி)இந்த இருவர்களோடு நாயாகம் சேர்ந்து கொண்டார்கள். ஒருவர் வாகனத்தில் வரும் போது மற்ற இருவரும் நடந்து வருவார்கள் அப்படி நாயகத்தின் முறை வரும் போது அந்த இரு சஹாபாக்களும் யாரசூளுல்லாஹ் நீங்கள் வாகனத்தில் அமர்ந்து வாருங்கள் நாங்கள் இருவரும் நடந்து வருகிறோம் என்று சொல்வார்கள். அப்போது நாயகம் நடப்பதில் என்னை விட நீங்கள் சக்திவாய்ந்தவர்களும் அல்ல நானும் நடப்பதின் மூலம் தரப்படும் கூலியை விடுபவனாகவும் இல்லை என்றார்கள்.
(அர்ரஹீக்) 

மக்களுக்கு முடிந்த அளவு நன்மை செய்பவர்களாக இருக்க வேண்டும். 

ஒரு யுத்தத்திலிருந்து திரும்பி வரும் சமயம் உணவு தயார் செய்யும் நேரத்தில் ஒவ்வொரு சஹாபியும் வேலைகளை பகிர்ந்து எடுத்து கொண்ட போது நாயாகமும் காடுகளுக்கு சென்று விறகுகளை வெட்டி கொடுத்தார்கள்.

இப்படி பொறுப்பாளர்கள் மக்களோடு மக்களாக கலந்து இருக்கவேண்டும். 

பொறுப்பில் கவனமாக இருக்க வேண்டும். 

புகாரியில் வரும் செய்தி  கஃப் இப்னு அஷ்ரஃப் என்பவனின் தொல்லைகள் அதிகமானது அவனை கொலை செய்ய  முஹம்மத் இப்னு மஸ்லமா (ரலி) அவர்கள் நாயகத்திடத்தில் பொறுப்பேற்றார்கள் ஆனால் இவர்கள் மூன்று நாட்களாக சாப்பிடவும் இல்லை உறங்கவும் இல்லை என்று நாயகத்திடத்தில்  சஹாபாக்கள் முறையிடுகிறார்கள் நாயகம் அவர்களை அழைத்து விசாரிக்க முஹம்மத் இப்னு மஸ்லமா (ரலி) அவர்கள் யாராசூளுல்லாஹ் நான் தங்களிடம் ஒரு பொறுப்பை எடுத்து கொண்டேன் அதை சரியாக நிறைவேற்றுவேனா என்ற அச்சம் தான் என்னை இப்படி ஆக்கியது என்றார்கள் உடனே நாயகம் நீங்கள் முயற்சி செய்யுங்கள் அல்லாஹ் வெற்றியை தருவான் என்றார்கள்.

அகவே பொறுப்பென்பது நமக்கு சுகமல்ல மறுமையின் பெரும் சுமை என்பதை நாம் மறக்க கூடாது.

நாம் எல்லோரும் தத்தமது பொறுப்புகளை உணர்ந்துஅதை சரிவர நிறைவேற்ற வேண்டும்.  வல்லோன் அல்லாஹ் நம்முடைய எல்லா பொறுப்புகளையும் சரியாக நிறை வேற்றும பாக்கியச்சாளிகளாக ஆக்குவானாக ஆமீன்    




























  



Comments

  1. Yatharthamaana vaarthhaigal innum athigamha vaasikka thoonduhinrana..
    Insha Allah "Poruppai poruppaaha cheyvom"...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சகோதரத்துவத்தை ஏற்படுத்துவோம்

தைரியத்தைத் தரும் உணவு முறைகள்!

வறுமையை ஒழிப்போம்!